Tuesday, July 17, 2012

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -Kannan mananilayai thangame thangam




1.கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் -
                                                               அடி தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்,
 ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 

2.கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;
அந்நிய மன்னர்மக்கள் பூமியிலுண்டாம் என்னும் 
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம். 

3.சொன்ன மொழிதவறு மன்னவனு க்கே எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?அவை
 யாவுந் தெளிவு பெறக் கேட்டு விடடீ.

4.மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-
தலை மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே -கிழப் 
பொன்னி யுரைதததுண்டு தங்கமே தங்கம். 

5.ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை 
அழைத்துத் தனியிடத்திற் பேசிய தெல்லாம் 
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே 
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.

6.சோர மிழைத்திடையர் பெண்க ளுடனே அவன்
சூழ்ச்சித் திறமைபல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே 
வேண்டிய தில்லையென்று சொல்லிவிடடீ.

7.பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் -மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப் 
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.

8.நேர முழுதிலுமப் பாவிதன்னையே - உள்ளம் 
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-

தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.

1 comment:

  1. என்னதான் இவர் அருமையாக இசைத்தாலும் இசை மேதை G. ராமநாதன் இசையில் வந்த மெட்டுபோல் வராது. என்ன, அதை இசைக்குயில் சுசீலாவை வைத்து பாடவைக்கவில்லை என்ற பெருங்குறைதான்.

    ReplyDelete